1. Home
  2. தமிழ்நாடு

வேப்பனப்பள்ளி அருகே அமர்ந்த நிலையில் நிசும்பசூதனி சிலை கண்டுபிடிப்பு..!

1

வேப்பனப்பள்ளி அருகே சின்னகொத்தூரை அடுத்த தேவர்குந்தானி கிராமத்தில் மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படு்த்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமர்ந்த நிலையில் உள்ல நிசும்பசூதனி சிலை இருப்பது கண்டறியப்பட்டது.


இது தொடர்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது: தேவர் குந்தானி கிராமத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் உள்ள நாகர் சிலைக்கு அருகே பாதி புதைந்த நிலையிலிருந்த சிலையைத் தோண்டி பார்த்தோம். அச்சிலை வரலாற்று பொக்கிஷமான சோழர்களின் குலதெவய்வமான நிசும்பசூதனி (குந்தாணி அம்மன்) சிலையாகும். இச்சிலை 11-ம் நுாற்றாண்டின் கலையம்சத்தில் உள்ளது.


தட்டையான உடலமைப்புடன், பீடத்தில் அமர்ந்துள்ள நிலையில், தலையில் சுடரும், நான்கு கைகளும், ஒரு கையில், சூலாயுதத்தைப் பிரயோகிக் கும் நிலையும், 2-வது கையில் உடுக்கையும், 3-வது கையில் பாசக் கயிறும், 4-வது கையில் பாத்திரம் ஏந்தியவாறும், வயிற்றுப் பகுதியில் மடிப்புகளுடன் காணப்படுகின்றது. மேலும், காலில் நிசும்பன் என்ற அரக்கனை வதம் செய்யும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது.


வழக்கமாக நின்று வதம் செய்யும் காட்சி இல்லாமல், இங்கு அமர்ந்த நிலையில் காணப்படுவதால், குந்தியம்மன் என்ற பெயர் வந்திருக்கலாம். இச்சிலைத் தொடக்கத்தில் அலே குந்தாணி என்ற ஊரில் இருந்திருக்க வேண்டும். போசள மன்னனான வீர ராமநாதன் இத்தெய்வத்துக்கு தேவர்குந்தானியில் கோயில் கட்டி வைத்திருக்கலாம். இந்த அம்மன் பெயரால்தான் ஒரு ராஜ்ஜியம் உருவாகி, அதன் பெயரையும் குந்தாணி ராஜ்ஜியம் என்று வைத்து தலைநகர் குந்தாணி எனவும் வைத்திருக்கிறார்கள்.

சோழர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய விஜயாலயன், தன் தலைநகரான தஞ்சாவூரில் நிசும்பசூதனிக்கு கோயில் எழுப்பினான் என கூறுவர். அதைப்போலவே தமிழகத்தில் முன்பிருந்த கண்ணனூரை விடுத்து, இங்கு புதிய ராஜ்ஜியத்தை இங்கு தோற்றுவித்தபோது இச்சிலையை நிறுவியிருக்கலாம்.

பின்னர் மூன்றாம் வல்லாளன் இந்த ராஜ்ஜியத்தை மீண்டும் போசள ராஜ்ஜியத்துடன் இணைத்தான். இச்சிலைச் சேதம் அடைந்த நிலையில், 13-ம் நூற்றாண்டில் 2 சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு சிலை தருமபுரி அருங்காட்சியகத்திலும், மற்றொரு சில சின்னகொத்துார் பாறையிலும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

Trending News

Latest News

You May Like