1. Home
  2. தமிழ்நாடு

பேராசிரியை பெயரில் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய நிர்மலா தேவி வழக்கு : ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு..!

1

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரியில் பயிலும் மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோவும் வெளியானது. அதில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியிருந்தது பதிவாகியிருந்தது. 

அந்த போன் அழைப்பு ஆடியோவில், மாணவிகளிடம் ஆசையைத் தூண்டி பேசிய நிர்மலா தேவி, அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் குறித்தும் பேசினார். இந்த விவகாரம் அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய பூதாகரமானது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.  அதைத் தொடர்ந்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கூறி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் தமிழக காவல் துறை கைது செய்தது. அருப்புக்கோட்டை போலீஸார் இந்த வழக்கை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பதாக பேராசிரியர் முருகன் அப்போது குற்றம் சாட்டினார்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு அப்போதைய எஸ்.பி.யும் தற்போதைய தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.யுமான ராஜேஸ்வரி விசாரணை நடத்தி, ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது.

மார்ச் 14ல் விசாரணை அதிகாரியான ஐ.ஜி. ராஜேஸ்வரி சாட்சியமளித்தார். இதனையடுத்து ஏப். 1-ல் இறுதி கட்ட விவாதங்கள் நடந்தன.இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில்  ஏப். 26ல் வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார்.

Trending News

Latest News

You May Like