நீலகிரி கலெக்டர் அதிரடி : இ-பாஸ் நடைமுறையில் வந்த முக்கிய மாற்றம்..!

நீலகிரி மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த இ- பாஸ் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி இன்று ஏப்ரல் 22 ஆம் தேதி முதல், இ- பாஸ் விதிமுறை நான்கு முக்கிய நுழைவு வழிகளில் மட்டுமே பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கட்டாயமாக இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, நீலகிரியில் நுழையும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு மட்டுமே மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டன. சுற்றுலா பிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகும் கோடை விடுமுறை காலங்களில் இந்த நடைமுறை அவசியமாகவும் விளங்கியது.
இந்நிலையில், ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அறிவுரையின் படி, இ-பாஸ் நடைமுறை இந்த 4 நுழைவு வாயில்களில் மட்டும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல்கூடலூர் ஆகிய 4 இடங்களில் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.