1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு அடுத்த ஷாக்..! தேங்காய் விலை கிடுகிடுவென உயர்வு..!

1

கடந்த சில வருடங்களாக தேங்காய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூ.15-25க்கு விற்ற தேங்காய், இப்போது ரூ.80-100க்கு விற்கப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. 2020-21ல் கொரோனா ஊரடங்கு காரணமாக தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் தேங்காய்கள் அதிகமாக முற்றி 2022-23ல் விலை குறைந்தது. விலை குறைந்ததால் விவசாயிகள் தேங்காய் மரங்களை சரியாக பராமரிக்கவில்லை. புதிய மரக்கன்றுகளையும் நடவில்லை. இதனால் விளைச்சல் குறைந்துவிட்டது. மீண்டும் பழைய நிலைமைக்கு வர பல வருடங்கள் ஆகும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

தென்னை மரங்கள் வளர அதிக காலம் எடுக்கும். குட்டை ரக மரங்கள் மூன்று வருடங்களில் காய்க்கும். ஆனால், உயரமான மரங்கள் ஐந்து முதல் எட்டு வருடங்கள் வரை ஆகும். 2022ல் அதிக மழை, 2023ல் வறட்சி, 2024-25ல் கடுமையான வெப்பம் போன்ற காரணங்களால் கர்நாடகாவில் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தும்கூரு, மாண்டியா, ஹசன், சிக்மகளூரு, சித்ரதுர்கா, போன்ற பகுதிகளில் 30 சதவிகித தேங்காய் உற்பத்தி பூச்சிகளால் பாதிக்கப்பட்டது.

ஆந்திராவில் புயல் மற்றும் பூச்சி தாக்குதல்களால் 25 சதவிகித தென்னை தோப்புகள் சேதமடைந்தன. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மற்றும் நெல்லை பகுதிகளில் வேர் அழுகல் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்குதலால் 40 சதவிகித விளைச்சல் பாதிக்கப்பட்டது. கேரளாவில் இலை அழுகல் நோய் மற்றும் நடுக்குருத்து மஞ்சள் நோய் காரணமாக தேங்காய் மரங்கள் காய்ந்து போயின. இந்த நிலையில் தற்போது ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை காலங்களில் தேங்காய் தேவை அதிகரித்தது. இதனால் தேங்காய், எண்ணெய் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் விலையும் உயர்ந்தது.

தேங்காய் உற்பத்தி குறைவு என்பது உலகளாவிய பிரச்சனை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.பயிர் பராமரிப்பு குறைவு மற்றும் காலநிலை மாற்றமே விலை ஏற்ற இறக்கத்திற்கு காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றன. இந்தியாவில் தேங்காய் எண்ணெய் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4,23,000 ஆக உள்ளது. இது இரண்டு வருடங்களில் மூன்று மடங்கு அதிகம். இந்தியா 2024-25ல் 15 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து உலகின் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தியாளராக உள்ளது. கர்நாடகா 28.5 சதவிகிதம் உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளன.

Trending News

Latest News

You May Like