1. Home
  2. தமிழ்நாடு

தவெக புதிதாக தொடங்கப்பட்ட கட்சி : ரசிகர்களை வைத்து ஜெயித்து விடலாம் என்று விஜய் எண்ணக் கூடாது... செல்லூர் ராஜூ..!

1

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி, தொகுதி உள்ளிட்டவை குறித்து தெரிவிக்க முடியும். 2026- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் யார் யாருடன் கூட்டணி வைக்கிறார் என்ற முழு விவரம் தெரிய வரும். ஏனென்றால், 10 நாள்களுக்குள் கூட்டணியில் இருந்த கட்சி கூட விலகி வேறு கூட்டணியில் இணை வாய்ப்புள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாதை மாறி சென்று விட்டார். அவரின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் அவரது தலைமை பண்பை விமர்சிக்கும் வகையில் உள்ளது. ஜெயலலிதா மிகப்பெரிய பண்புடையவர், அவரைப் பார்த்து நான் மெய் சிலிர்த்து விட்டேன் என்று தொல். திருமாவளவன் என்னிடம் பாராட்டி பேசி இருந்தார். தற்போது அவருக்கு என்ன நெருக்கடி வந்தது என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறை சொல்லி பேசி வருகிறார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபரை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தி அழகு பார்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எனவே, திருமாவளவன் தனது தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிமுகவினர் பாராட்டும் வகையில் அவர் செயல்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் புதிதாக தொடங்கப்பட்ட கட்சி. அவர்கள் தற்போது தான் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துகின்றனர். பனையூரில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அவர் களத்துக்கு வந்து அரசியல் செய்ய வேண்டும். மாநாட்டிலும், செயற்குழுவிலும் பேசியதை வைத்தும், தனது ரசிகர்களை வைத்தும் ஜெயித்து விடலாம் என்று விஜய் எண்ணக்கூடாது.

மதுரை மாநகராட்சியில் ரூ. 150 கோடிக்கு மேல் வரியில் முறைகேடு செய்ததாக மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஐந்து மண்டல தலைவர்கள், நிலைக் குழு தலைவர் இருவரை முதல்வர் மு. க. ஸ்டாலின் பதவி நீக்கம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் ரவி என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மேலும், இதில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் மண்டல தலைவர் மற்றும் நிலைக்குழு தலைவர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த குற்றச்சாட்டுக்கு எதிராக அதிமுக குரல் கொடுத்ததோ அந்த கட்சியின் மீது வீண் பழியை திமுக சுமத்தும் நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் எங்கள் நிலை குழு தலைவர் மீது குறை கூறுவது தவறு. ரூ. 150 கோடி வரி முறைகேட்டை சாதாரணமாக செய்திருக்க முடியாது. மேயர் என்ற பதவியின் போர்வையில் இருந்து கொண்டு செய்துள்ளனர் அதில் என்ன விவகாரம் என்பது விசாரணை தெரியவரும் என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like