பெங்களூர் குண்டுவெடிப்பு விசாரணையில் புதிய திருப்பம்.. தொப்பியால் கிடைத்த துப்பு..!
![11](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ea2a5125cc0adbf0c635e79035195e14.webp?width=836&height=470&resizemode=4)
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ததப்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதுமே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடாக போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வரும் சூழலில், குற்றவாளியை நெருங்கிவிட்டதாகவும் இரவு பகல் பாராமல், இந்த வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விசாரணையில், தொடக்கம் முதல் ஒரே ஒரு அடையாளம் என்னவென்றால் குற்றவாளி அணிந்திருந்த 10 என்ற எண் கொண்ட தொப்பி. குற்றவாளி, சம்பவ இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு சென்று அங்கு தொப்பியை வீசிவிட்டு, ஆடையை மாற்றிக் கொண்டு பேருந்தில் ஏறுவது சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது..
எனவே, அந்த தொப்பியை வைத்து விசாரணையை நகர்த்திய அதிகாரிகளுக்கு, ஒரு தொப்பியை இரண்டு இளைஞர்கள் வாங்கியிருப்பதும், அவர்கள் ஷிவமோகாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், அவர்கள் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது அடையாளங்கள் குற்றவாளிகளோடு ஒத்துப்போகிறதா என்று சோதனை நடந்து வருகிறது.
பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரும், சில நாள்கள் சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.குண்டுவெடிப்புக்குப் பிறகு குற்றவாளிகள் இருவர், கர்நாடகத்திலிருந்து கேரளம் சென்று, அங்கிருந்து தமிழகம் வந்து, தமிழகத்திலிருந்து ஆந்திரம் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.