சென்னையில் செயல்பாட்டுக்கு வந்த புதிய டிக்கெட் முறை..! இனிமே பணமே தேவையில்லை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/e4b6d898d9265848d739ddf22360aeb4.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு பயணச் சீட்டு வழங்கும் வகையில், மின்னணு பயணச்சீட்டு கருவிகள் 16 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமல்படுத்தப்பட்டன.
இதன் பின்னர், 2011-ம் ஆண்டில் அதி நவீன பயணச்சீட்டு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்க அரசு திட்டமிட்டது. இத்திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, சுமார் 30 ஆயிரம் கருவிகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டன.
எனினும், புதிதாக வாங்கப்பட்ட கருவிகளில் பயணச்சீட்டு கொடுக்கும் நேரம் 4 நொடிகள் கூடுதலாவது, 8 மணி நேரம் மட்டுமே பேட்டரி நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இவை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, சரி செய்யப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக கருவிகள் அனைத்தும் திருப்பி வாங்கப்பட்டு, வழக்கமான பயணச்சீட்டு நடைமுறையே தற்போது பெரும்பாலான பேருந்துகளில் அமலில் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கருவிமூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னையில் பேருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அனைத்து பேருந்துகளிலும் மின்னணு டிக்கெட் இயந்திரம் (ETM) மூலம் டிக்கெட் பெறும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இப்புதிய வசதி மூலம் இனி Card, UPI பயன்படுத்தி டிக்கெட் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.