ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு..!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் தானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த சூழலில் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறுமி தானியா கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் அறிந்தவுடன் உடனடியாக சிறுமி தானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு சவிதா மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி சிறுமிக்கு முதல்கட்ட முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சவீதா மருந்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன் பின்னர் டிசம்பர் மாதம் இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுதும் மோரையில் உள்ள சிறுமி தானியாவின் வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் நலம் விசாரித்தார். ஏற்கனவே சிறுமி தானியாவின் கல்வி படிப்பு மற்றும் அதற்கான செலவினை அப்பகுதி திமுக பிரமுகர் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருந்தார். இதற்காக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் முன்னிலையில் சிறுமி தானியாவை அருகில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார்.
தொடர்ந்து அறுவை சிகிச்சை பள்ளிப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்திருந்த நிலையில் கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தானியா சிறுமிக்கு திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் 3 சென்ட் இலவச பட்டாவை வழங்கினார். தற்போது அந்த இடத்தில் இன்று காலை வீடு கட்ட நகர்புற வீடு கட்டும் அரசு திட்டத்தின் கீழ் அரசு மானியம் 2 லட்சத்து 10ஆயிரம் ரூபாய் அமைச்சர் காந்தி தானியா மற்றும் அவர்கள் பெற்றோரிடம் வழங்கி வீடு கட்ட அடிக்கல் நாட்டினார், இவ்விழாவில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.