புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! வரும் 25ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதனால் வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடப்பதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
இந்த ஒரு மாதத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இந்த மாதத்தில் உருவாகும் 3ஆவது காற்றழுத்த தாழ்வுப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in