நீட் இளநிலை தேர்வில் ஆள் மாறாட்டம் : ஜெய்ப்பூரில் 5 பேர் கைது..!

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் நீட் இளநிலை தேர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் நீட் தேர்வெழுத ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் ஒரு கும்பல். கர்னி விஹார் ஜக்தம்பா நகரில் அமைந்துள்ளது ஏபிடி பிரிஸ்டைன் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து நேற்று (திங்கள் கிழமை) 5 பேரை போலீஸார் கைது செய்ததாக தெரிவித்தனர்.
கைதானவர்களிடமிருந்து போலி தேர்வு ஆவணங்கள், புளூடூத் சாதனங்கள், 4 சிம் கார்டுகள், மொபைல் போன்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஒரு ஸ்கார்பியோ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சோமுவின் சிமன்புராவைச் சேர்ந்த அஜித் குமார் பராலா (26), சமோட்டின் குஷல்புராவைச் சேர்ந்த சோஹன் லால் சௌத்ரி (26), ஹர்மடாவின் பிச்பாடியைச் சேர்ந்த ஜிதேந்திர சர்மா (24) ஆகியோர் அடங்குவர். முதற்கட்ட விசாரணையில், சோஹனும் அஜித்தும் மோசடி வழிகளில் தேர்வெழுதியவர்கள் வெற்றி பெறுவதற்காக, தேர்வர்களிடமிருந்து பெரும் தொகையை வசூலித்ததும் தெரிய வந்தது.