நீட் கொடுமை : தாலியை கழட்டி மனைவியை அனுப்பிய கணவர்..!

நீட் தேர்வு எழுத 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு சென்றனர் மாணவர்கள். மாணவ மாணவிகளை மெட்டல் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்தனர் காவல்துறையினர். கடும் சோதனைக்கு பிறகு மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் ஹேர்பின், நகைகள், கொலுசு போன்றவை அணிய தடை உள்ளதால் தேர்வு மையங்களுக்கு போகும் முன்னரே இளம்பெண்கள் பலரும் நகைகளை பெற்றோர்கள், உடன் வந்தவர்களிடம் கழற்றி கொடுத்து விட்டு சென்றனர்.
காலை 11 மணி முதல் மாணவ மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில் இறுதி நேரமான 1:30 மணிக்கு அவசர அவசரமாக வந்த மாணவி ஒருவர் தன்னுடைய தாலியை கணவனிடம் கழட்டி கொடுத்துவிட்டு வேக வேகமாக நீட் தேர்வு எழுத சென்றார்.
இதேபோல கொலுசு, மெட்டி, தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றை மாணவிகள் கழற்ற முடியாமல் அவதிப்பட்டு கழட்டி கொடுத்து விட்டு சென்றனர். நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் மற்றும் அவர்களோடு கூட வந்த உறவினர், பெற்றோர்களில் பலரும் தேசிய தேர்வு முகமை முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால் கடும் அவதி அடைந்தனர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளே சென்ற பிறகு அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் காத்திருக்கவும் உணவு அருந்தவும் தேசிய தேர்வு முகமை செய்துள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. பலர் வெயிலில் காத்திருக்கிறார்கள்.
கேந்திரியா வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் உள்ளே ஒரு கிலோமீட்டர் நடந்தே செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அங்கு முறையான வாகன ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போட்டிருக்கும் சாமியான பந்தல் போதுமான அளவிற்கு இல்லை. தேர்வு எழுதி மாணவர்களும் மாணவிகளும் வெளியே வரும் வரை கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் கடுமையான அவதி அடைந்தனர்.