1. Home
  2. தமிழ்நாடு

இன்று நீட் நுழைவுத் தேர்வு : மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை..!

1

2025-ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு இன்று மே 4-ம் தேதி தேசிய அளவில் ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு சுமார் 23 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் எழுத உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட 31 மாவட்டங்களில் இதற்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு 2025 - மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை

  • நீட் தேர்வு நடைபெறவுள்ள தேர்விற்கான அட்மிட் கார்டு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வெளியானது. அட்மிட் கார்டில் தேர்வு மைய விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.
  • தேர்விற்கு முன்னரே அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும். தரவுகள் சரிபார்ப்பு, செக்கிங் ஆகியவற்றினால் சிறிது நேரம் எடுத்துகொள்ளப்படும்.
  • எனவே, பதற்றம் ஏற்படாமல் இருக்க முன்னரே செல்லவும். தேர்வு அறையில் தண்ணீர், கழிப்பிடம் ஆகிய வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
  • ஓஎம்ஆர் தாளில் விடைகளை சரியாக குறிப்பிடவும்.
  • தேர்வு அறைக்கு அட்மிட் கார்டை பிரிண்ட் எடுத்து செல்லுவது கட்டாயமாகும். மேலும், தேர்வர்கள் புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து செல்லவும்.

இந்தாண்டு நீட் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் Section A மற்றும் Section B என அமைக்கப்பட்டு இருக்கும். இந்தாண்டு முதல் Section B என்பது நீக்கப்படுகிறது. எனவே கேட்கப்படும் 180 கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இயற்பியலில் 45 கேள்விகள், வேதியியலில் 45 கேள்விகள் மற்றும் உயிரியலில் 90 என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மேலும், தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு மட்டுமே தேர்வு நடைபெறும்.எனவே தேர்வர்கள் 3 மணி நேரத்தில் 180 கேள்விகளுக்கு கட்டாயம் ஓஎம்ஆர் தாளில் பதிலளிக்க வேண்டும்.

நீட் மூலம் என்னென்ன மருத்துவப் படிப்புகளில் சேரலாம்? 

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), சித்தா (BAMS), யுனானி (BUMS), ஆயுர்வேத ( BSMS) மற்றும் ஹோமியோபதி (BHMS) ஆகிய படிப்பிற்கான சேர்க்கைக்கு நீட் அவசியமாகும். மேலும், செவிலியர் (B.Sc. Nursing), கால்நடை மருத்துவம் (BVSc & AH) ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நீட் தேர்வு மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

நீட் தேர்வு தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?

நீட் தேர்வில் தேர்ச்சி பெறப் பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் (Percentile), எஸ்சி/எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 40% மற்றும் பொதுப்பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு 45% தேர்ச்சி விகிதமாக வைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதத்தை பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுப்படும்.

நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்

கடந்த ஆண்டு தரவுகள்படி, பொதுப் பிரிவு - 720 முதல் 162, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு - 161 முதல் 127 ஆக கட்-ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு பொது பிரிவு - 161 முதல் 144, ஒபிசி, எஸ்சி,எஸ்டி பிரிவு - 143 முதல் 127 வரை இருந்தது. அதன் அடிப்படையில் இந்தாண்டுக்கான தேர்ச்சி அளவை பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுப்படும்.

எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்க எத்தனை கட்-ஆஃப் மதிப்பெண்கள் தேவை?

  • அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ் சீட்டிற்கு பொதுப் பிரிவில் 650 முதல் கட்-ஆஃப் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு 500 அதிகமாகவும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 600க்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தனியார் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கு 650 முதல் 700 வரை கட்-ஆஃப் மதிப்பெண்கள் அமையலாம்.
  • எஸ்சி, எஸ்டி பிரிவனருக்கு 550 முதல் இருக்கலாம். இதர பிரிவினருக்கு 600 முதல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அமையலாம்.

தேர்வு முடிவுகளை உத்தேசமாக ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களுக்கு மத்திய, மாநில கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Trending News

Latest News

You May Like