Navaratri 2025 day 1 : நவராத்திரி முதல் நாள் பூஜை நேரம், அலங்காரம், நைவேத்தியம்..!
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்க்கையாக வழிபட வேண்டும். துர்க்கை என்றாலே துக்கங்களை நீக்கி, நமக்கு அரணாக இருந்து காக்க கூடியவள் என்று அர்த்தம். அனைத்திலும் வெற்றியை தரக் கூடியவள் என்பதாலும், அம்பிகை தவம் செய்ய துவங்கிய காலம் என்பதால் இந்த நாளில் நாமும் அவளை மனதார நினைத்து வழிபடலாம். நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபட வேண்டும். நவ துர்க்கைகளில் முதல் தேவியான சைலபுத்திரியாகவும் வழிபட வேண்டும். அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் அமைத்து, மலர்களில் மல்லிகையும், இலைகளில் வில்வமும் கொண்டு அம்பிகையை அர்ச்சித்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக வெண் பொங்கல் அல்லது சுண்டல் படைத்து வழிபட வேண்டும். பாட வேண்டிய ராகம் தோடி. இந்த நாளில் அம்மனுக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி அலங்கரிக்க வேண்டும். நாமும் பச்சை நிற உடை உடுத்து பூஜை செய்ய வேண்டும்.
முதல் நாள் வழிபாட்டு பலன்கள் :
நவராத்திரியின் முதல் நாள் தேவியான உமா மகேஸ்வரியை வழிபட்டால் வறுமை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும், ஆயுள் நீடிக்கும். உமா மகேஸ்வரி சிவனில் பாதியாக விளங்கக் கூடியவள். இவளை வழிபட்டால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி, செல்வம் பெருகும். இந்த நாளில் யாராவது இரண்டு பேரையாவது வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் வழங்க வேண்டும். இதனால் அம்பிகையை நம்முடைய வீட்டிற்கு வந்து, நம்முடைய பூஜையை ஏற்று, தாம்பூலத்தை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.
.png)