நெட் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16-ம் நாள் வரை யுஜிசி-நெட் தேர்வுகளை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து மத்திய கல்வி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றியமைக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஜனவரி 15 மற்றும் 16 பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விடுமுறை நாட்களில் நடத்த திட்டமிட்டு இருந்த யுஜிசி-நெட் தேர்வை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உட்பட பலர் கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 15-ம் தேதி சமஸ்கிருதம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், சட்டம், மலையாளர், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு யுஜிசி நெட் தேர்வு நடைபெறவிருந்தது. பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தேர்வு தேதிகளை மாற்றக்கோரி கோரிக்கை மத்திய உயர்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனையடுத்து, தற்போது ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த நெட் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16-ம் தேதி தேர்வு நடைபெறும்
மேலும், ஜனவரி 16-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான அட்மிட் கார்டு ஏற்கனவே வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேசிய தேர்வு முகமையினால் (NTA) யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வாக ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிசம்பர் 11-ம் தேதி வரை பெறப்பட்டது.
இதற்கான தேர்வுகள் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2025 ஜனவரியில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை 14ஆம் தேதி 16ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. அதில் ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம் (மாட்டுப் பொங்கல்) மற்றும் ஜனவரி 16 (உழவர் திருநாள் (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.
இதனையடுத்து, தற்போது ஜனவரி 15-ம் தேதி நடைபெறும் தேர்வு தேதி மட்டும் மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 16-ம் தேதி தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்.