நீட் தேர்வில் மோசடிகளில் ஈடுபட்ட 63 மாணவர்கள் தேசிய தேர்வுகள் முகமை தகுதி நீக்கம்..!
கடந்த மே மாதம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில் பல்வேறு மோசடிகல் நடைபெற்றதாக இந்த மாதத் தொடக்கத்தில் ஆங்காங்கே புகார்கள் எழுந்தன.அதிலும், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த புகார்களில் உண்மை இருக்கிறது என்பது தெரியவந்தது.
வழக்கத்துக்கு மாறாக பல மாணவர்கள் நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். அதிலும் ப்ளஸ் டூ தேர்வில் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் நீட் தேர்வில் 700-க்கும் மேலே மதிப்பெண்ணை எடுத்திருந்தான். அதேபோல, ஒரு தேர்வு மையத்தில் இருந்த பல மாணவர்களுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தன. இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.
நீட் வினாத்தாள்கள் பல லட்சங்களுக்கு விற்பனை செய்ப்பட்டதும், பணம் கொடுத்து நீட் தேர்வில் பலர் முழு மதிப்பெண்களை பெற்றிருப்பதும், நீட் வினாத்தாளை கசிய விடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் என்பவருக்கு பதிலாக, பிரதீப் சிங் கரோலாவை மத்திய அரசு நியமித்தது. அத்துடன், நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில்தான், நீட் தேர்வில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 63 மாணவர்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, இவர்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்து என்டிஏ உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 40 மாணவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 17 மாணவர்கள் பீகாரை சேரந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.