1. Home
  2. தமிழ்நாடு

கன்னியாகுமரியில் நரேந்திர மோடி தியானம் செய்வது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அவமானம் - செல்வப்பெருந்தகை..!

1

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில், வரும் 1-ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று 30-ம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். பின்னர் அன்றில் இருந்து 3 தினங்களுக்கு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து மோடி தியானம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு பொதுமக்கள் செல்ல மேற்குறிப்பிட்ட 3 தினங்களுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், மோடியின் இந்த தியானத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜூன் 1-ம் தேதி 57 தொகுதிகளில் கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, கன்னியாகுமரில் விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்யவுள்ளார். இதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவுமே இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து போவார் என்பதற்கு இந்த தியான நாடகம் தான் சிறந்த உதாரணம்.

சுவாமி விவேகானந்தர் தன் வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கத்தை கடைப்பிடித்து இந்து மதத்தை உலகம் முழுவதிலும் பரப்பியவர். அனைத்து மதத்தினராலும் நேசிக்கப்பட்டவர். அத்தனைக்கும் மேலாக அவர் ஒரு சாந்த சொரூபி. அதே சமயத்தில், தனது நாவன்மையால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர். ஆனால், நரேந்திர மோடியோ, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல கண்டும் காணாமல் இருந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் கோல்வால்கரின் கோட்பாட்டை படித்து வளர்ந்த நரேந்திர மோடியால், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே படித்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்காது.

ஆகவே, விவேகானந்தர் பாறையில் அவர் மேற்கொள்ளும் தியானம், சுவாமி விவேகானந்தரை இழிவுபடுத்துகிற முயற்சி ஆகும். இதன் மூலமாக இந்து மதத்திற்கே களங்கம் கற்பிக்கும் வகையில் நரேந்திர மோடியின் தியான நாடகம் அமையப் போகிறது. மோடியின் இந்த நடவடிக்கை, அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மீக நோக்கம் கொண்டது கிடையாது.. நாடகம்: மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி செய்யும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் மட்டுமல்ல, இந்தியாவுக்கே அவமானம் ஆகும். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like