3-வது முறை நாளை இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார் மோடி ..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/5682d2d345e5e4f32f7b83f7d6429475.jpg?width=836&height=470&resizemode=4)
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) புதிய எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் நேற்று (ஜூன் 7) நடைபெற்றது. பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஜூன் 9-ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப்பிராமணம் செய்து வைக்கிறார்.இதனைத் தொடர்ந்து, மற்ற அமைச்சா்களும் பதவியேற்கிறார்கள்.
இந்த விழாவுக்கு தொழிலாளர்கள், மத்திய அரசு திட்டங்களில் பலன் பெறுவோர், ரெயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
அதேபோல், புதிய பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட "சென்ட்ரல் விஸ்டா" திட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களால் பலன் பெற்றவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.