சென்னையில் `நம்ம ஊர் திருவிழா! எப்போ தெரியுமா ?
கிராமங்களில் பொங்கல் திருவிழா மிக உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மரபுகளைப் பின்பற்றிக் கிராமப்புறங்க ளில் நாட்டுப்புற கலைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. கிராமங்களில் காலங்காலமாக நடைபெற்று வரும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தெரியாமல் போய்விடுகின்றன.
குறிப்பாகச் சென்னை போன்ற நகரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் நாட்டுப்புற கலைகளைப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இன்றைய இளைய சமுதாயத்திற்கு தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் சென்னையில் “நம்ம ஊர் திருவிழா” நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட உள்ள சென்னை வாசிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந்தேதி (பொங்கல்) முதல் 17-ந்தேதி வரை நடத்துவதற்கு தமிழக அரசுக் கலை மற்றும் பண்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
முன்னதாக இந்தத் திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்குக் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரஸ்வரர் கோவில் திடலில் தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் 18 இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து மாபெரும் இசை நடன நிகழ்ச்சியை நடத்து கிறார்கள்.
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திப்பாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத்திடல், தி.நகர் நடேசன் பூங்கா.
நுங்கம்பாக்கம் விளை யாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலிமாறன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா.
கொளத்தூர் மாநகராட்சி திடல், அம்பத்தூர் எஸ்.வி.விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கிராமிய கலைநிகழ்ச்சி கள் நடைபெறும்.
நம்ம ஊர் திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பை யாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம் ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம்.
சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களின் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.
இவற்றுடன் மராட்டிய மாநில லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவாவின் விளக்கு நடனம், மிசோரம் மூங்கில் நடனம் ஆகியவை இடம்பெறுகிறது.
இது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சுற்றுலா பண்பாடுத்துறை செயலாளர் சந்திரமோகன், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் எம்.எஸ்.சண்முகம், கோ.லட்சுமிபதி, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி, சுற்றுலாத்துறை ஆணையர் ஷில்பா பிரபா கர் சதீஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை வாழ் பொதுமக்கள் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை விழாவைக் கண்டு மகிழ பணிகளைக் குறித்த காலத்தில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.