சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி - சீமான்..!

காட்டுமன்னார்கோவிலில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த போராளிகள் நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழர்கள் எப்போதும், பழம்பெருமை பேசுவார்கள் என திராவிடர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழர் வரலாற்று பெருமை பேசுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். வரலாறு என்பது ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் வழித்தடம்.
தமிழரின் அடையாளங்களை மறைத்தால்தான் திராவிடத்தால் அரசியல் செய்ய முடியும் என்று திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அவரது மகன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். இவரது மகன் உதயநிதி துணை முதல்வராக உள்ளார். அரசியலில் விடுதலை என்பது ஓட்டுதான்.
வலிமைமிக்க ஓட்டுகளை ரொட்டி துண்டுகளுக்காக விற்காதே என்று கூறிய அம்பேத்கர் வழியில் மக்கள் செயல்பட வேண்டும். திராவிட அரசியலின் சூழ்ச்சியே தமிழ் தேசிய அரசியலை பிரித்தல் ஆகும். தமிழர்கள் பிரிந்து இருப்பதால் தான் திராவிடம் வலுப்பெற்று வருகிறது.
கஞ்சா, புகையிலை, மது பழக்கம் ஆகியவற்றில் இருந்து மீள வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். 2026ல் சமூக நீதி அரசியல் நிச்சயமாக இடம் பெறும். சமூக நீதி காவலர்கள் என கூறிக் கொள்பவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க அஞ்சுவது ஏன். இவ்வாறு சீமான் பேசினார்.