பெண் இன்ஸ்பெக்டருக்கு மர்ம பார்சல்.. வெடிகுண்டு பீதியால் பரபரப்பு.. இருந்தது என்ன தெரியுமா..?
பெண் இன்ஸ்பெக்டருக்கு மர்ம பார்சல்.. வெடிகுண்டு பீதியால் பரபரப்பு.. இருந்தது என்ன தெரியுமா..?

பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று (டிச. 6ம் தேதி) அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்துவிடாத வண்ணம் கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் வாகன சோதனை உள்ளிட்ட சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு நேற்று முன்தினம் இரவு பார்சல் ஒன்றை நபர் ஒருவர் கொண்டு வந்தார். அது, ‘பரிசு பார்சல்’ என்றும், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியிடம்தான் கொடுப்பேன் என்றும் அந்த நபர் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த பார்சல், உதவி கமிஷனர் பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி அந்த பார்சல் தனக்கு வந்தது இல்லை என்று வாங்க மறுத்துவிட்டார்.
இதனால், அது வெடிகுண்டு பார்சலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வந்து பார்சலை மோப்ப நாய் உதவியுடன் எடுத்துச் சென்றனர். கலைவாணர் அரங்கம் பின்புறம் உள்ள மைதானத்தில் வைத்து அந்த பார்சலை பிரித்துப் பார்த்தனர்.
அப்போது, அது வெடிகுண்டு பார்சல் இல்லை என்பதும், உண்மையிலேயே பரிசு பார்சல்தான் என்பதும் தெரியவந்தது.. அந்த பார்சலுக்குள் முந்திரி பருப்பு, பாதாம், திராட்சை மற்றும் சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தன. வெடிகுண்டு என்று பெரும் பீதியை ஏற்படுத்திய பார்சல், பரிசு பார்சலாக அனைவர் நெஞ்சிலும் பால் வார்த்தது.
தற்போது, அந்த பார்சலை கொண்டு வந்த நபர் யார்? என்று போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வாயிலாக இதுபற்றி போலீசார் துப்பறிந்து வருகிறார்கள்.