1. Home
  2. தமிழ்நாடு

நாடு முழுவதும் மே 20ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் - முத்தரசன்..!

Q

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் உழைப்பாளர் தினத்தையொட்டி கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடி ஏற்றினார். நிகழ்வில் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என மக்களுக்கு எதிராக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. மோடி அரசின் கண்மூடித்தனமாக மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து வரும் மே 20ஆம் தேதி நாடு தழுவிய கால வரையற்ற பொது வேலை நிறுத்தத்தை தொழிற்சங்க அமைப்புகள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் அமைப்புகள் இணைந்து அறிவித்துள்ளன.

வேலைநிறுத்தப் போராட்டத்தை விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்குபெற்று வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும். அதேபோல மறைமுகமான முறையில் பல நிறுவனங்களில் 12 மணி நேரம், அதற்கு மேலாகவும் வேலை வாங்குகிறார்கள். அரசு தலையிட்டு இதனை முறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஒன்றிய அமைச்சரவை தற்போது அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. குறுகிய காலத்திற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த புள்ளிவிவரங்களை வைத்து சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்

Trending News

Latest News

You May Like