கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை.. மயிலாப்பூர் சாலையில் நடந்த கொடூரம் !
சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (27). இவர் அப்பகுதியில் சில சேட்டைகள் செய்து ரவுடிபோல் வலம் வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வசந்த் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் கடந்த வாரம் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு மயிலாப்பூரில் சாலையில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியை எடுத்து சரமாரியாக மணிகண்டனை வெட்டினர். இதில் கை, கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி விழுந்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.
அதில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மணிகண்டன் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in