தேமுதிகவுக்கு MP சீட்..? இபிஎஸ் தடாலடி அறிவிப்பு..!

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அப்போது தேமுதிகவுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக, ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்ததாக கூறப்பட்டது. இதனை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அப்போது உறுதி செய்திருந்தார்.
ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அதிமுக சார்பில் வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக தாங்கள் கூறவில்லை என கூறினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக - தேமுதிக இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும் பொறுமை காக்கும்படி தேமுதிகவுக்கு அதிமுக தலைவர்கள் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்து, முதலில் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளோம். இன்னும் 9 மாத காலம் இருப்பதால், இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் அமையும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்."
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக எல்.கே.சுதீஷ் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அதைப் பற்றி பின்பு தெளிவாக ஊடகத்தினருக்கு தெரிவிக்கப்படும்" எனக் கூறியுள்ளார். ராஜ்யசபா சீட் தொடர்பான கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி நேரடியாக பதில் அளிக்க மறுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.