வாகன ஓட்டிகளே உஷார்..! இனி இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அபராதம்..!
இருசக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் என எல்லா வாகனங்களும் கண்டிப்பாக இன்சூரன்ஸ் பேப்பருடன் தான் வாகனங்கள் ஓட வேண்டும். .இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று விதிகள் உள்ளது.
இப்போது உள்ள தொழில்நுட்பத்தின் படி எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த வாகனங்கள் எல்லாம் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுகின்றன என்பதை எளிதாக அரசால் கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் ஏராளமான வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுவதை கண்ட மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக நிதின் கட்காரி மீண்டும் பொறுப்பேற்றார். இதையடுத்து, மோட்டார் வாகன காப்பீடு தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், "மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 146-ன் கீழ், இந்திய சாலைகளில் ஓடும் மோட்டார் வாகனங்களுக்கு 3-ம் தரப்பு அபாயங்களை உள்ளடக்கிய காப்பீடு அத்தியாவசியமானது. செல்லுபடியாகும் 3-ம் தரப்பு காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் அல்லது அனுமதிப்பவர்கள் சட்டத்தை மீறியதற்காக சிறை தண்டனை உள்பட பல வழிகளில் தண்டிக்கப்படுவார்கள்.
அத்தகைய குற்றவாளிகள் மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 196-ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள். முதல் குற்றம்: 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.2,000 அபராதம் அல்லது இரண்டும். மற்றும் அடுத்தடுத்த குற்றம்: 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.4,000 அபராதம் அல்லது இரண்டும்.
வாகன உரிமையாளர்கள் தங்களுடைய மோட்டார் வாகனங்களில் 3-ம் தரப்பு காப்பீட்டின் நிலையை சரிபார்த்து, ஏற்கனவே செய்யவில்லை என்றால், விரைவில் காப்பீட்டைப் பெற வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.