திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அவசர உத்தரவு!
கொரோனா 2ஆவது அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலையை விட நோய் பரவல் வேகம் அதிகம் இருப்பதால் மத்திய, மாநில அரசு அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே போல் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் நேரம் மட்டுமல்ல, எப்போதும் மக்களுடன் இனைந்திருக்கும் பேரியக்கம்தான் தி.மு.க என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனாவால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' எனும் செயல்பாட்டின் மூலம் அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க நிறைவேற்றியது என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கொரோனா 2ஆவது அலை குறித்த எச்சரிக்கையை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளதால் அதுகுறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள், வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள் என தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட 'ஒன்றிணைவோம் வா'ருங்கள் உடன்பிறப்புகளே என ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
newstm.in