1. Home
  2. தமிழ்நாடு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கேரள அரசுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

1

பாஜக ஆளாத மாநிலங்களின் குரல்வளையை நெரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இதைக் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் கேரள அரசு மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

மத்திய அரசிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ் நாடு அரசு முழு ஒத்துழைப்பு நல்கும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில், மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கேரள அரசின் இந்த செயல்பாட்டில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது என்றும், மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதன்படி, மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

இது மாநில அரசின் நிதிப் பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

1) கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023-2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், நடப்பாண்டில், ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

2) நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.

3) மத்திய அரசின் சென்னை மெட்ரோ ரெயில் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறது. அதனால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும் மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில், இத்தகைய பாரபட்சமான, அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும். முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டுமென்று கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like