வகுப்பறை பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள் : வீடியோவை பகிர்ந்து பாராட்டிய அமைச்சர்

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளி நாட்களில் மறக்க முடியாத மகிழ்வான நிகழ்வுகள் பல நடந்திருக்கும். வகுப்புகள் நடக்காத நேரத்தில் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பாட்டு படிப்பது, மேஜையில் கையால் மேளம் தட்டுவது, இப்படி பல நிகழ்வுகள் நமது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். அவ்வாறு பள்ளி மாணவர்கள் பலர் இணைந்து, பள்ளி வகுப்பறையில் மேஜையில் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி நிகழ்த்திய இசை முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்களே அந்த இசை முழக்கத்தை வகுப்பறையில் அரங்கேற்றி இருக்கின்றனர். அவர்கள் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி மேஜையில் தட்டி இசையை ஏற்படுத்தியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
பொதுவாக மாணவர்கள் பள்ளி வகுப்பறைகளில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்த மாணவர்களின் இந்த செயலுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதிக அளவில் வரவேற்பே கிடைத்திருக்கிறது.
காரணம் அவர்கள் வெளிப்படுத்திய இனிமையான இசை.பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி மேஜையில் தட்டி மாணவர்கள் நடத்திய அந்த இசை முழுக்கம், உண்மையான இசைக் கருவிகளை பயன்படுத்தி அடிப்பது போன்றே இனிமையாக ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவை பலரும் பார்த்துள்ளனர்.
கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தனது முகநூல் பக்கத்தில் பள்ளி வகுப்பறையில் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி இசை முழக்கத்தை வெளிப்படுத்திய கோழிக்கோடு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.