சென்னையில் மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்..!
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பாக இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த போராட்டத்தை நடத்த 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அரசு பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிற்சங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முழுமையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழகத்தில் பொது வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மாநகரப்பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
.பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படவில்லை என்றும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால் இன்று பேருந்துகள் ஓடாது என்ற அறிவிப்பால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தபால் நிலையங்கள், வங்கிகள் ஆகியவற்றை இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளால் இவற்றின் சேவைகளில் சிறிது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் இன்று ஆட்டோக்கள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளதால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. ஒருசில ஆட்டோக்கள் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்கிறது.