வங்கக்கடலில் உருவாகும் புயல்.. தமிழகத்துக்கு எந்தளவு பாதிப்பு இருக்கும் என வானிலை மையம் கணிப்பு

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல் காரணமாகத் தமிழகத்துக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனர். தற்போது மழை சிறிது ஓய்ந்திருக்கும் நிலையில் புயல் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகரக் கூடும். அதனை அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 3ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று, 4ஆம் தேதி வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகிற 2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றே கூறியுள்ளது.
newstm.in