மருத்துவ மாணவி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது..!
உதய்பூரில் விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்வேதா, கடந்த 24ம் தேதி இரவு விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. விடுதியில் ஸ்வேதா கைப்பட எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், 'கல்லுாரி ஊழியர்கள் இருவர் கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்கிறேன். என்னுடன் படித்தவர்கள் பயிற்சியாளர்களாக சென்றுவிட்ட நிலையில், நான் இன்னும் கடைசி ஆண்டு படிக்கிறேன். இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டிய தேர்வை, பணத்துக்காக இரண்டு ஆண்டுகளாக நீடிக்கின்றனர்.
'லஞ்சம் தருபவர்களை நிர்வாகம் தேர்ச்சி பெற வைக்கிறது. அடிக்கடி பணம் கேட்டு நிர்வாகம் தொந்தரவு செய்கிறது; பணம் செலுத்த முடியாதவர்களை நிர்வாகம் துன்புறுத்துகிறது' என, குற்றஞ்சாட்டியிருந்தார்.
மாணவியின் தற்கொலைக்கு காரணமான கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து கல்லுாரி முன், மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவி குற்றஞ்சாட்டிய ஊழியர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவியின் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.