ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் : மதிமுக தீர்மானம்..!

மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று அக்கட்சியின் தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. அதில் துரை வைகோ - மல்லை சத்யா இடையேயான பிரச்னை பேசித் தீர்க்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டை வழிநடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும் என்றும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், 10 மசோதாக்கள் சட்டமாகிட ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆகவே, ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். எனவே அவரை குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல வக்ஃபு சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும், இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பதற்கு கண்டனம், தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், மதச்சார்பின்மை, நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும், அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது என்றும் கடைசி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரை நீக்க வேண்டு, வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.