தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : செல்லூர் கே.ராஜூ அறிக்கை..!
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தாலுகாவில் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 183 பேர் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்தனர்.இதில் தற்போது வரை 55 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தை உலுக்கும் இந்த சம்பவம் தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சி சாராயம் மரணம் குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடியார் சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டு வருவது தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி போல் உள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய கையாளாகாத விடியாதிமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினை உடனடியாக பதவி வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துரை, ஆறுமுச்சந்தியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி,வட்ட கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ,கழக செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரண்டு வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.