நாளை காலை யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு..!
மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு நாளை காலை 11:45 மணிக்கு யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் படித்துறையில் நடக்கிறது.
நேற்று இரவு டில்லியில் உள்ள தன் வீட்டில் மன்மோகன் சிங் மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி 9:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்ததுடன், நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரது இறுதி ஊர்வலம் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து காலை 9:30 மணிக்கு துவங்கும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.
இந்நிலையில், நாளை காலை 11:45 மணிக்கு டில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் படித்துறையில் முழு ராணுவ மரியாதை உடன் இறுதிச்சடங்கு நடக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.