மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் 15-ம் தேதி வரை நீட்டிப்பு..!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
பின்னர், இது தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நேற்று நிறைவடைந்த நிலையில், ரோஸ் அவன்யூ கோர்ட்டில் சி.பி.ஐ. அவரை நேரில் ஆஜர்படுத்தப்படுத்தியது.
அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.