சதுப்புநில மீட்பு போராளி ஜெயஸ்ரீ வெங்கடேசன் ராம்சார் பன்னாட்டு விருதுக்கு தேர்வு - அன்புமணி ராமதாஸ் மகிழ்ச்சி!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டின் நீர் நிலைகள், சதுப்புநிலங்கள் மீட்புக்காக போராடும் கேர் எர்த் அமைப்பின் நிறுவனர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ராம்சார் அமைப்பின் 'அறிவுபூர்வ சதுப்புநில பயன்பாட்டுக்கான' (Wise use of wetlands) பன்னாட்டு விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
உலக அளவில் இந்த விருதினை பெறும் 12 பெண்களில் இவரும் ஒருவர் என்பது தமிழகத்திற்கு பெருமையாகும். சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் வெறும் புறம்போக்கு நிலம் என கருதப்பட்டு அழிக்கப்பட்ட காலத்தில் அது ஒரு மிகச்சிறந்த இயற்கை வளம் என நிரூபித்தவர் ஜெயஸ்ரீ வெங்கடேசன். அவருக்கும், மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்புக்கும் கால் நூற்றாண்டுக்கும் கூடுதலான உறவு உண்டு.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்கக் கோரி 2003 ஆண்டில் பசுமைத் தாயகம் சார்பில் பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை எனது தலைமையில் நடத்தப்பட்ட மிதிவண்டி பேரணியில் அவர் பங்கேற்றார். கடந்த ஆண்டு அவரது கேர் எர்த் அமைப்பின் 'காலநிலை மாற்றம் மற்றும் நீரிடர் - சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும்' ('Climate Change and Water Risk- a Strategy and Action Plan') நூலினை பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி வெளியிட்டார்.
சதுப்பு நிலங்களைக் காக்க தொடர்ந்து பாடுபட்டு வரும் ஜெயஸ்ரீ வெங்கடேசன் ராம்சார் பன்னாட்டு விருதுபெறுவதற்கு முற்றிலும் தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்... என அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
.png)