மரத்தை முழுமையாக வெட்டி சாய்த்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்..!

கோவை தெற்கு வட்டம், சவுரிபாளையம் கிராமம், சண்முகம் வீதியை சேர்ந்த கனகராஜ் என்பவர், தனியார் மருத்துவமனை முன், ரோட்டோரத்தில், 2 அடி சுற்றளவு, 10 அடி உயரத்தில், 12 வயதுடைய அரச மரம் இருப்பதாகவும், அதன் கிளை காய்ந்து மருத்துவமனை மீது சாய்ந்து விழும் அபாயம் உள்ளதால், நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக உள்ளது. மரக்கிளையை வெட்டுவதற்கு அனுமதி கோரி, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
சவுரிபாளையம் வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, ஆபத்தாக உள்ள கிளையை மட்டும் வெட்டி அகற்ற அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர்.உரிய வழிமுறைகளை பின்றி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை சம்பந்தப்பட்ட ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ., முன்னிலையில் வெட்டி அகற்ற, அனுமதி அளித்து, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனருக்கு, தெற்கு தாசில்தார் முகமது சைபு உத்தரவிட்டார்.
மரக்கிளையை வெட்டும் முன்பும், வெட்டிய பின்பும் புகைப்படங்கள் எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க கோவை டவுன் நில வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில், அரசு அதிகாரிகள் இல்லாமல், மரம் வெட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி, வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., ஆகியோர் ஆய்வு செய்து, தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அரசின் உத்தரவை மீறி, அனுமதிக்கு மாறாக மரத்தை வெட்டிச் சாய்த்த குற்றத்துக்காக, கனகராஜ் என்பவருக்கு, விதிமுறைப்படி, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தாசில்தார் முகமது சைபு உத்தரவிட்டார். கனகராஜ், அத்தொகையை செலுத்தினார்.