இளம்பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்த மதுரை போலீஸ் சஸ்பெண்ட் ..!!

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையில் வேலை பார்க்கும் 22 வயது இளம்பெண் உள்பட 5 ஊழியர்கள் கடை உரிமையாளருடன் செல்லூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்து விட்டு நள்ளிரவு 1 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இளம்பெண்ணை கடைக்காரர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது, நேதாஜி ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த 2 போலீசார் அவர்களை வழிமறித்தனர். அதில் ஒரு போலீஸ்காரர் கடை உரிமையாளரிடம், “இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள்? நீங்கள் இருவரும் யார்?” என்று கேட்டுள்ளார். பின்னர் அவர், இளம்பெண்ணை தான் பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதாக அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அந்த போலீஸ்காரர், இளம் பெண்ணை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், யாரிடமும் இதை தெரிவிக்க கூடாது என்று கூறி ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
வீட்டிற்கு சென்ற அந்தப் பெண், தன்னை போலீஸ்காரர் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
விசாரணையில், இளம்பெண்ணை கடத்தி கற்பழித்தது திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரியும் முருகன் (35) என்பதும், அவருடன் இருந்த மற்றொருவர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரர் முருகனை கைது செய்தனர்.
இந்நிலையில், பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். மதுரை திலகர்திடல் காவல்நிலைய குற்றப்பிரிவு முதல்நிலை காவலர் முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியுள்ளார்.