1. Home
  2. தமிழ்நாடு

மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்..!

1

விருதுநகர் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் முனியாண்டியின் மகன் சுரேஷ் என்பவர், 2011 டிசம்பர் 2ம் தேதி இரு சக்கர வாகனத்தை திருடியபோது பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்து விட்டார். ஆனால், இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவரான சுரேஷின் நண்பர் டேவிட் என்பவர், சுரேஷை பொதுமக்கள் பிடித்து கரிமேடு காவல்துறையில் ஒப்படைத்ததாகவும், அங்கு காவல்துறையினர் தாக்கியதில்தான் சுரேஷ் மரணமடைந்ததாகவும் புகார் கூறினார்.

இதையடுத்து, சுரேஷ் மரணத்திற்கு அப்போதைய உதவி ஆணையர் வெள்ளத்துரை, திலகர் திடல் ஆய்வாளர் விவேகானந்தன், கரிமேடு உதவி ஆய்வாளர் சீனி ஆகியோர் தான் காரணம் என்றுகூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுரேஷின் தந்தை முனியாண்டி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த ஆணையம், காவல்துறை தாக்கியதால் மரணம் ஏற்பட்டது நிரூபணமாகியுள்ளதாக கூறி, முனியாண்டி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அப்போது உதவி ஆணையராக இருந்த வெள்ளத்துரை, ஆய்வாளராக இருந்த விவேகானந்தன் ஆகியோரிடமிருந்து தலா 2 லட்சத்து 50 ஆயிரத்தை வசூலித்து இந்த இழப்பீட்டை வழங்க வேண்டுமெனவும், இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, வெள்ளத்துரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வு, பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே சுரேஷ் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த காயம் பொதுமக்கள் தாக்கியதாலேயே ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே சுரேஷின் மரணத்திற்கு வெள்ளத்துரை தான் காரணம் என்பதற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி, மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Trending News

Latest News

You May Like