உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை கொட்டியது. மேலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் அக்டோபர் 12ஆம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார்.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வரும் 12ம் தேதி வரை அந்தமான் கடற்பகுதி, மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் ஆந்திரா கடற் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அக்டோபர் 10 முதல் 12 வரையிலான காலகட்டத்தில் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
newstm.in