ராமரை வணங்குபவர்களுக்கு ஆணவம் வந்ததால் 241-ஆக குறைத்துவிட்டார் ராமர்..!
ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இந்தரேஷ் குமார், கட்சியின் பெயர்களைக் குறிப்பிடாமல் பாஜக மற்றும் ‘இந்தியா’ கூட்டணியை விமர்சித்து பேசியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் இந்தரேஷ் குமார் பேசியதாவது:
"ராமரை வணங்கிய கட்சிக்கு படிப்படியாக ஆணவம் வந்ததால், அவர்களின் வெற்றி 241-ஆக குறைந்துவிட்டது. இருப்பினும், தனிப் பெரும் கட்சியாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு தேவையான வெற்றி கடவுளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ராமர் நம்பிக்கை இல்லாமல் எதிர்த்தவர்களுக்கு ஆட்சி கிடைக்கவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தும் 234 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அவர்கள் அனைவரும் இணைந்தும் இரண்டாம் இடம்தான் பெற முடிந்தது.
ராமர் யாரையும் கைவிடமாட்டார். அனைவருக்கும் நீதி வழங்குவார். ராமர் மக்களை காப்பாற்றுவார். அவர், ராவணனுக்குகூட நன்மையை செய்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, உண்மையான சேவகர் ஆணவத்தைக் காட்டி மற்றவர்களைக் காயப்படுத்த மாட்டார் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.