1. Home
  2. தமிழ்நாடு

எப்படி எல்லாம் மோசடி செய்யுறாங்க பாருங்க..! 88 லட்சம் சம்பாதித்த திண்டுக்கல் வாலிபர்..!

1

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவருடய தங்கை பவித்ரா என்பவர் எம்.எஸ்சி., எம்.எட். படித்து விட்டு அரசு ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். பவித்ராவின் கணவர் ஜெகதீஸ், சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

 

இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை செய்யும் பவித்ராவின் கணவர் ஜெகதீசுக்கு, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த சூரஜ் (வயது 29) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் தனக்கு அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் நன்றாக தெரியும் என்றும், அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அப்போது ஜெகதீஷ், தான் சிங்கப்பூரில் இருப்பதாக கூறியதுடன், பவித்ராவின் அண்ணன் சிரஞ்சீவியை தொடர்பு கொள்ளுமாறு சூரஜிடம் ஜெகதீஸ் கூறினார். இதையடுத்து சிரஞ்சீவியை சூரஜ் தொடர்பு கொண்டு, வத்தலக்குண்டு அரசு பள்ளியில் ஒரு முதுநிலை ஆசிரியை பணியிடம் காலியாக உள்ளதாகவும் ரூ.50 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி கொடுப்பதாகவும் கூறினார். அதை நம்பி சிரஞ்சீவியும், சிங்கப்பூரில் இருந்தபடி ஜெகதீசும் வங்கிக் கணக்கு மூலம் சூரஜுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார்களாம்.

அந்த வகையில் அவர்கள் ரூ.43 லட்சத்து 87 ஆயிரத்து 899 அனுப்பி இருந்தனர். அதைப் பெற்றுக் கொண்ட சூரஜ் ஒரு பணி நியமன ஆணையை 'வாட்ஸ்-அப்' மூலம் பவித்ராவுக்கு அனுப்பி வைத்தார். அதில் கோவை அரசு பள்ளியில் பணி வழங்கப்படுவதாக இருந்தது. இதையடுத்து அந்த பணியிடத்தை வத்தலக்குண்டுவுக்கு மாற்றிக் கொடுப்பதற்கும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கும் அவர்கள் ரூ.44 லட்சத்து 14 ஆயிரத்து 17 அனுப்பி வைத்துள்ளார்கள்.

ஆனால், பணி மாறுதல் உத்தரவு தாமதம் ஆகி வந்ததால் ஏற்கனவே கிடைத்த உத்தரவை பவித்ராவும், சிரஞ்சீவியும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் சரிபார்த்தனர். அப்போது, அது போலி பணிநியமன ஆணை என்று தெரியவந்தது. மொத்தம் ரூ.88 லட்சத்து 916 கொடுத்து அவர்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோசடி குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிரஞ்சீவி புகார் செய்தார். அதில் இந்த மோசடிக்கு சூரஜின் தாய் சுமதியும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டினார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சூரஜ், சுமதி ஆகிய 2 பேர் மீது கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களை கைது செய்ய தேனி இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தனிப்படை போலீசார், சூரஜை நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் எம்.பி.ஏ, பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை தேடி வந்ததாகவும், அந்த நேரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து வேறுயாரையும் சூரஜ் ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்து தேனி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like