கோவை பிரியாணி ஹோட்டலில் உணவில் பல்லி.? பல்லி எப்படி வந்தது அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள்.!

கோவையில் இயங்கும் "கோவை பிரியாணி ஹோட்டல்" லில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் வந்து பிரியாணி ஆர்டர் செய்து அங்கு உட்கொண்ட போது பிரியாணிக்கு வழங்கப்பட்ட குழம்பில் பல்லி இருந்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை (27.5.2025) அவர் தரப்பில் குற்றச்ச்சாட்டு எழுந்தது. இது கோவையில் அன்று பெரும் பரபரப்பான செய்தியானது.
மேலும் குழம்பில் பல்லி இருந்தது வீடியோ காட்சிகளுடன் செய்திகளில் வெளியானது. இதையடுத்து அதே நாளில் அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும், உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் உணவகத்தின் உரிமையாளா் மற்றும் மேலாளா் ஆகியோா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் ஒன்றை அளித்தனா். அதில் அவர்கள், உணவகத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாங்கள் பார்த்தபோது அந்த குழம்பில் செயற்கையாக பல்லி போடப்பட்டது எனவும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.