1. Home
  2. தமிழ்நாடு

இனி மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு ஆயுட்காலத்திற்கு கடுங்காவல் சிறைத்தண்டனை..!

1

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “சட்டமன்றப் பேரவையில் ஜூன் 29 அன்று தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஜூலை 11 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு அது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

  • 100 லிட்டருக்கு மேல் சட்ட விரோதமாக மதுபானம் ஏற்றுமதி, இறக்குமதி செய்தல் அல்லது வைத்திருத்தல், சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்தல், சட்ட விரோதமாக மதுபான ஆலை கட்டுவது, விற்பனைக்காக சட்ட விரோதமாக மதுபானங்களை பாட்டில்களை அடைத்தல் போன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்கு குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 2- 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
  • 50 லிட்டருக்கு மேல் நூறு லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி அல்லது வைத்திருத்தல் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
  • ஐம்பது லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, அல்லது வைத்திருத்தல், சட்ட விரோதமான மது அருந்துதல் மற்றும் வாங்குதல், உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு ஓராண்டுக்கு குறையாத 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 50,000/- ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
  • மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு இனி ஆயுட்காலத்திற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்து இலட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.
  • மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இனி 5 -10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 5 - 10 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் என விதிக்கப்படும்.
  • மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்திற்குப் புதிய பிரிவாக, அந்தக் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காகப் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும்.
  • மதுபானம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தல் குற்றத்திற்கு, 2- 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1 - 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
  • மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்பட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like