அ.தி.மு.க. மாநாட்டுக்கான ஜோதி ஓட்டம்: இ.பி.எஸ். துவக்கி வைத்தார்..!

அ.தி.மு.க. வீரவரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொது மக்களையும் திரட்ட அ.தி.மு.க.வினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இருந்து மதுரைக்கு ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படுகிறது. தலைமை கழகத்தில் நேற்று காலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து ஜோதியை தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக்கிடம் வழங்கினார்.
சீருடை அணிந்த 50 தொண்டர்கள் ஜோதியை ஏந்தியபடி ஓடினார்கள். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், டி.ஜெயக்குமார், பொன்னையன் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ராயப்பேட்டையில் இருந்து புறப்பட்டு, மந்தைவெளி, அடையாறு, எஸ்.ஆர்.பி.டூல்ஸ், விஜயநகர் வழியாக சென்னை புறநகர் மாவட்டத்தை அடைந்ததும் புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஜோதிக்கு வரவேற்பளித்து அங்கிருந்து ஜோதியை ஏந்தியபடி காமாட்சி மருத்துவமனை வழியாக மேடவாக்கம் சென்றனர். அங்கிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தை அடைந்ததும் அந்த மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் ஜோதி வழியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் ஊர்களுக்குள் எடுத்து செல்லப்படுகிறது. 20-ந்தேதி காலையில் மதுரையை சென்றடைகிறது. அங்கு வளையங்குளத்தில் மாநாட்டு திடலில் ஜோதியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்குகிறார்கள்.