மறைந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை - தமிழக அரசு..!
பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரனான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நேற்று பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனை அடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்பட்டது. சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று (டிச. 15) பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தொண்டர்கலின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.