1. Home
  2. தமிழ்நாடு

குமரி அனந்தன் காலமானார்... யார் இந்த குமரி அனந்தன்?

1

யார் இந்த குமரி அனந்தன்?


கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி ஆனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.

ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டு, அதன் விளைவாக 1984-ல் 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர்.

குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் அதற்குரிய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.

இவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் சொந்த அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. குமரி அனந்தனின் மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மூத்த தலைவராக உள்ளார்.


திருவொற்றியூர், ராதாபுரம் சாத்தான்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் .1980 காலக் கட்டத்தில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கினார். திருவொற்றியூர் தொகுதியில் 1980ல் இந்த கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றார். பின்னர் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன்பிறகு கடைசி வரை காங்கிரஸ் கட்சி தொண்டராக இருந்தார்.

Trending News

Latest News

You May Like