1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : ஆஞ்சநேயரின் அருளை விரைவாக பெற இதை மட்டும் பண்ணுங்க..!

1

உண்மையான பக்தனின் அழுகையைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார் ஆஞ்நேயர். ஓடிவந்து அபயக்கரம் நீட்டுவார். அருள் வழங்கி கைதூக்கி விடுவார் என்கிறார்கள் பக்தர்கள். உண்மையான பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சொல்ல வேண்டும் என்றால், முதலிடத்தில் இருப்பவர் ஆஞ்சநேயர் தான். அவரின் அருளை உடனடியாக பெறுவதற்கு சில எளிமையான விஷயங்களை செய்தாலே போதும்.


அவரை வீர அனுமன் என்றோ, ஜெய் அனுமன் என்றோ சஞ்ஜீவி என்றோ பெருமையுடன் நாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இதையெல்லாம் அவர் ஒருபோதும் விரும்பியதே இல்லை. ராமபக்த அனுமன் என்று சொல்லும் போதே குதூகலமாகி விடுவார் அனுமார். அந்த அளவுக்கு ஸ்ரீராமபிரான் மீது, ஆழ்ந்த பக்தியுடன் திகழ்ந்தவர் அனுமன். அவரை வழிபட்டால் எதிரிகள் விலகி செல்வார்கள். ஆபத்துக்கள் நெருங்காது. குறிப்பாக விபத்து போன்றவை ஏற்படாது. நினைத்த காரியங்கள் நடக்கும். மன தைரியம், ஆரோக்கியம் பெருகும். அதை விட முக்கியமான கிரக தோஷங்கள், சனியால் ஏற்படும் தோஷங்கள் நம்மை பாதிக்காது.

அனுமாரின் பலம் அனுமாருக்கேத் தெரியாது என்பார்கள். அது உண்மைதான். தன் பலமும் பராக்கிரமும், ராமபிரானை அனைத்து நேரமும் பூஜித்துப் போற்றுவதும் வணங்கித் தொழுவதுமே என்று உறுதியாக இருந்தார் ஆஞ்சநேயப் பெருமான். அனுமனிடம் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், எல்லா தெய்வங்களும் அபய ஹஸ்தம் என்பதான முத்திரைகளில் தான் தங்கள் திருக்கரங்களை வைத்திருப்பார்கள். அப்படியே திருக்கரங்களை வைத்தபடி நமக்கு அருள்பாலிப்பார்கள். ஆனால் அனுமனோ, தன் இரண்டு கைகளையும் கூப்பிய நிலையில், நம்மைப் போல, அதாவது ஒரு பக்தனைப் போல காட்சி தருவார். இதுவே அனுமனின் மகத்தான சிறப்பு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆகவே பக்தர்களின் தலைவனாகத் திகழும் அனுமனை, அஞ்சனை மைந்தனை, ஆஞ்சநேயப் பெருமானை என்ன கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றாலும், நெருக்கடியான காலங்களிலும் வழிபடுவது சிறப்பு. குறிப்பாக சனிக்கிழமை நன்னாளில் மறக்காமல் வணங்குங்கள். அவனுடைய சந்நிதியில் நின்று கொண்டு, "ஜெய் அனுமன்", "ஆஞ்சநேயருக்கு ஜே" என்று சொல்கிறோமோ இல்லையோ... "ஜெய் ராம்... சீதாராம்... ராம்ராம் சீதாராம்" என்று ராமநாமத்தை சொல்லுங்கள். அனுமனின் அருள் உடனடியாக கிடைக்கும்.


அனுமன் சாலீசா பாராயணம் படியுங்கள். முடியாதவர்கள், அனுமன் சாலீசாவைக் காதாரக் கேளுங்கள். ஸ்ரீராம ஜெயம் எழுதுங்கள். இதில் மகிழ்ந்து குளிர்ந்து போவார் அனுமன். உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி, வருத்தங்களை எல்லாம் சொல்லி அனுமனிடம் அழுது புலம்பினால்... அவ்வளவுதான்... உங்கள் அழுகையை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஓடோடி வருவார். உங்கள் துயரங்களைப் போக்குவார். உங்கள் வாட்டத்தையெல்லாம் போக்கியருள்வான் வாயுமைந்தன்.

ஆஞ்சநேயரை வழிபட சொல்ல வேண்டிய மந்திரம் :

ஓம் ஜம் ஹரீம்
ஹனுமதே
ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய;
அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய,
ஸாகினீடாகினீ வித்வப்ஸனாய,
கிலகிய பூ பூ காரினே
விபீஷணாய,
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹரீம்
ஸ்ரீம் ஹராம்
ஹீரீம் ஹரும் பட் ஸ்வாஹா

பொருள் :

செய்வதற்கு அரிய செயல்களை செய்யும் என் சுவாமியே!
உன்னால் முடியாதது எதுவும் கிடையாது. ஸ்ரீ ராம தூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிரார்த்தனையை நிறைவேற்றிட அருள் புரிய வேண்டும்.

உண்மையான பக்தியுடன் இந்த மந்திரத்தை தினமும் கூறி வர வேண்டும். இந்த மந்திரத்தை கூறி நமது வேண்டுதல் அல்லது பிரார்த்தனையை முன் வைக்கும் போது நாம் எதிர்பார்த்த முடிவை அடைய முடியும்.


வால் வழிபாடு :

முருகனுக்கு எப்படி வேல் வழிபாடு சிறந்ததோ, அதே போல் அனுமனுக்க வால் வழிபாடு சிறந்ததாகும். ஆஞ்சநேயரின் வாலில் போட்டு வைத்தும், வெண்ணெய் சாற்றியும் வழிபட்டால், வெண்ணெய் உருகுவதை போல் நம்முடைய கஷ்டங்களும் வெண்ணெய் போல் உருகி ஓடி விடும் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது சிறந்த வழிபாடாகும். வட இந்தியாவில் இவருக்கு ஜாங்கிரி மாலை சாற்றும் வழக்கம் உள்ளது.

அனுமனின் வாலில் தான் சக்தி அதிகம். அதனால் வால் துவங்கும் இடத்தில், வாலின் நுனி பகுதி வரை சந்தனம் குங்குமம் பூசி வழிபட வேண்டும். அனுமன் காயத்ரி சொல்வதால் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் விலகும். ஸ்ரீராம ஜெயம் எழுதியும் மாலை கட்டி அனுமனுக்கு அனுவிக்கலாம். இதனால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like