வரும் 4ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தனது பதவியை இழப்பார் : அமித்ஷா..!

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:- முதல் 5 கட்ட தேர்தல் தொடர்பான விவரங்கள் என்னிடம் உள்ளன. முதல் 5 கட்டங்களில் பிரதமர் மோடி 310 இடங்களை கடந்துள்ளார். எனவே, ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது ராகுல் 40-ஐ தாண்டமாட்டார். அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள்கூட கிடைக்காது.
தேர்தல் முடிவுகள் வெளியானபின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தனது பதவியை இழக்கப் போகிறார். அதேசமயம், கட்சியின் தோல்விக்காக உடன்பிறப்புகளை (ராகுல், பிரியங்கா) யாரும் குறை சொல்ல மாட்டார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களால் தோல்வியடைந்ததாக கூறுவார்கள்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவார்கள். ஆனால், பா.ஜ.க. அப்படி நடக்க விடாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.