ஆபரேஷன் சிந்தூர் முக்கிய தருணங்கள் : 25 நிமிடங்கள்.. 24 அட்டாக்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்தனர். இதையொட்டி மத்திய அரசு பலகட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தது. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக மே 7ஆம் தேதியான இன்று நாடு தழுவிய போர் ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பதிலடி இனிமேல் தான் தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று இரவே இந்திய ராணுவம் கச்சிதமாக காரியத்தை சாதித்துள்ளது. கணவன்மார்களை கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளை பழிவாங்க ”சிந்தூர்” என்ற பெயரில் ஆபரேஷனை வடிவமைத்து தட்டி தூக்கியுள்ளனர்.
நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சயீத்னா பிலால் முகாம் - முஸாஃபராபாத், மஸ்கர் ரஹீல் ஷாஹித் - கோட்லி, பர்னாலா, முரிட்கே, பஹாவல்பூர், ஷவாய் நலா முகாம் - முஸாஃபராபாத், மர்கஸ் அபாஸ் - கோட்லி, சியால்கோட், தெஹீரா கலன் ஆகிய 9 இடங்கள் அடங்கும்.
1.28 மணி முதல் 1.51 மணி வரை; பாகிஸ்தானின் பஹ்வல்புர், முசாபராபாத் மற்றும் பல பகுதிகளில் தாக்குதல்.
1.51 மணி: நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது, ஜெய்ஹிந்த் என்று ராணுவம் பதிவு வெளியிட்டது.
2.46 மணி; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் வலை தளத்தில் பாரத் மாதா கீ ஜெய் என்று பதிவு.
இவற்றில் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடம், ஆட்சேர்ப்பு நடைபெறும் இடம், தங்குமிடம் ஆகியவை ஆகும்.
மொத்தம் 24 முறை ஏவுகணைகளை வீசி 9 முகாம்களும் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இந்திய ராணுவம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.