1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடகா மாநிலத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்க அரசு தடை..!

1

கர்நாடகா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கார்சினோஜெனிக் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகியவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இது மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளில் இருந்து அரசு தரப்பில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றை ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில், ஆபத்தான நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. இவை புற்றுநோயை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், 171 கோபி மஞ்சூரியன் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 107ல் கார்சினோஜெனிக் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்சினோஜெனிக் என்பது டார்ட்ராசைன், சன்செட் எல்லோ, கர்மோசைன் உள்ளிட்ட நிறமூட்டிகளை குறிக்கிறது.

இதையடுத்து 25 பஞ்சு மிட்டாய் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 15ல் செயற்கை நிறமூட்டிகளான டார்ட்ராசைன், ரோடமைன் - பி ஆகியவை இருந்தன. இவை அனைத்தும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தான் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இத்தகைய நிறமூட்டிகள் கலந்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் ஆகிய உணவுகளையும் விற்கக் கூடாது.

ஒருவேளை தெருவோரக் கடைகள், உணவகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் தடையை மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும். 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.

Trending News

Latest News

You May Like